ஷைபாலி அரைசதம்: 2-வது T20-ல் இலங்கையை வீழ்த்திய இந்தியா
விசாகப்பட்டினம்:
ஷைபாலி வர்மாவின் அதிரடியான அரைசதம் உதவியுடன், இரண்டாவது மகளிர் டி-20 போட்டியில் இந்திய அணி இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியா வந்துள்ள இலங்கை மகளிர் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, இரண்டாவது போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த இலங்கை அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. சமாரி 31 ரன்களுடன் அதிகபட்ச ஸ்கோர் செய்தார். இந்திய தரப்பில் வைஷ்ணவி மற்றும் ஸ்ரீசரணி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஷைபாலி வர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 34 பந்துகளில் 69 ரன்கள் எடுத்த அவர், அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்திய அணி 11.5 ஓவரில் 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.